மாவட்ட அளவில் இடைநிலை ஆசிரியர்கள் பதவி கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாவட்ட அளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பதை எதிர்த்து ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மாவட்ட அளவில் தேர்ந்தெடுப்பதால் பல மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த காலத்தில் வேலைக்கு சேரமுடியாத நிலை ஏற்பட்டதால் இந்த முறை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று முதன்மை அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா உள்பட 23 பேர் தங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நிராகரித்த நீதிபதி கே.சந்துரு, முதன்மை அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தார்.