திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஜூலை 1, 2 தேதிகளில் நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு இரயில்வே முதுநிலை மக்கள் தொடர்பு அதிகாரி வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜூலை 2ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே ஜூலை 1, 2 தேதிகளில் சிறப்பு இரயில்களை இயக்க தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு இரயில், நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 11.15 மணிக்கு திருச்செந்தூர் போய்ச்சேரும். திருச்செந்தூரில் இருந்து சிறப்பு இரயில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த சிறப்பு இரயில்கள் திருநெல்வேலி - திருச்செந்தூர் இரயில் பிரிவில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.