சென்ன ை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று உயர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால் கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பிரபாகரன், அகில இந்திய பார் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் தனபால்ராஜ், அப்துல் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த குமாரி, துணை தலைவர் டி.பிரசன்னா, வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு, பார் கவுன்சில் உறுப்பினர் செல்வம் உள்பட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் பேசிய வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால் கனகராஜ், எங்களுக்கு எதிராக காவலர்கள் குடும்பங்களை தூண்டி விட்டு சங்கங்கள் அமைக்க முயற்சி நடக்கிறது. இன்று வரை வழக்கறிஞர்களை தாக்கிய காவலர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் மனநிலை மாற்றப்பட வேண்டும். அப்போது தான் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல முடியும்.
வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாளை மதியம் உயர் நீதிமன்றத்தை சுற்றி மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம். இதில் சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்கறிஞர்களும் கலந்து கொள்கின்றனர் என்றார்.