கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இடிந்தகரையில் கடந்த 2ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது.
ஆம்ஆத்மி கட்சியில் கூடங்குளம் போராட்டக் குழுவினர் இணையும் நிகழ்ச்சி இடிந்தகரையில் இன்றுமாலை நடக்கிறது.
இதுகுறித்து கூடங்குளம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். இதற்காக போராட்டப் பகுதி மக்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறோம்.
இந்த நிகழ்ச்சி இன்றுமாலை இடிந்தகரையில் நடக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை. ஆம்ஆத்மி கட்சியில் இணைவதற்கான காரணங்களையும், அக்கட்சி அளித்த வாக்குறுதிகளையும் இன்று மாலை வெளியிடுவோம் என்று அவர் கூறினார்.
உதயகுமார் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2½ஆண்டுகளாக எளிய மக்களுக்காக போராடி எதையும் சாதிக்க முடியாத நிலையில், யாரும் ஏறெடுத்து பார்க்காத கவலையில் அரசியல் தளத்துக்குசென்றால், ஒரு விடிவை ஒரு முடிவை உருவாக்க இயலுமா என்று மக்களும், நாங்களும் சிந்தித்தோம். எங்களுக்கு ஆதரவாக நின்ற தமிழக கட்சிகளை ஒருங்கிணைக்க முயன்றோம்.