Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நண்பனுடன் காதலி சுற்றியதால் கொலை; காதலன் வெறிச்செயல்

நண்பனுடன் காதலி சுற்றியதால் கொலை; காதலன் வெறிச்செயல்
, திங்கள், 12 ஆகஸ்ட் 2013 (17:31 IST)
FILE
சென்னையில் காதல் தகராறில் நெறுங்கிய நண்பனைக் வெட்டிக் கொன்றவர் தப்பியோட்டம்.

சென்னை கோடம்பாக்கம் காமராஜ் காலனி 8 ஆவது தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி. போர்வெல் போடும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரபு (24). பி.எஸ்.சி. பட்டதாரி. இவர்கள் அங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

பிரபு விடுதலை சிறுத்தை பிரமுகர் ஆவார். சுப்பிரமணிக்கு மல்லிகா, கமலா என்ற 2 தங்கைகள் உள்ளனர். மல்லிகா அதே பகுதியில் உள்ள 1-வது தெருவிலும், கமலா மற்றொரு தெருவிலும் வசித்து வருகிறார்கள். மல்லிகா நேற்று வீட்டில் பிரியாணி செய்தார். பிரியாணி சாப்பிட தனது அண்ணன் மகன் பிரபு, கமலாவின் மகன் விக்னேஷ் ஆகியோரை அழைத்து இருந்தார். இதையடுத்து பிரபு, விக்னேஷ் ஆகியோர் மல்லிகா வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.

வீட்டு முன்பு தெருவில் அமர்ந்து பிரபு, விக்னேஷ், மல்லிகா மகன் ராஜூ ஆகியோர் இரவு 10.30 மணியளவில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் எடுத்து வருவதற்காக ராஜூ வீட்டுக்குள் சென்றார். வெளியில் பிரபுவும், விக்னேசும் இருந்தனர். திடீரென்று அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிளின் பின்புறம் பிரபுவின் நண்பர் சிவா அமர்ந்திருந்தார். இவர் ஒரு ரவுடி, பல அடிதடி வழக்குகளும் உள்ளன.

சிவா மோட்டார் சைக்கிளில் இருந்து அரிவாளுடன் வேகமாக இறங்கி ஓடி வந்தார். ஆவேசமாக பாய்ந்து பிரபுவை வெட்டினார். இதில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டு விழுந்தது. உடனே விக்னேஷ் அதை தடுத்தார். இதில் அவருக்கு இடது கை, முதுகு பகுதியில் வெட்டு விழுந்தது. பின்னர் சிவா மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். விக்னேஷ் படுகாயம் அடைந்தார். அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் கோடம்பாக்கம் காவல் ஆய்வாளர் கவுதமன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விக்னேசிடம் விசாரித்த போது, ‘‘மோட்டார் சைக்கிளை ஓட்டியது யார் என்று தெரியவில்லை. பின்னால் சிவா அமர்ந்திருந்தான். அவன் பிரபுவை வெட்ட பாய்ந்த போது வேண்டாம் என்று தடுத்தேன். ஆனால் முடியவில்லை’’ என்றார்.

அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் சிவாவை காதலித்தார். கடந்த 3 மாதங்களாக அவர் சிவாவுடன் பேசுவதில்லை. அவரை விட்டு விட்டு சிவாவின் நண்பர் பிரபுவிடம் பழகினார். பிரபு அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் வெளியில் அழைத்து சென்றுள்ளார்.

இந்த தகவல் சிவாவுக்கு கிடைத்தது. அவர் ஆத்திரம் அடைந்தார். பிரபுவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அந்த பெண்ணுடன் சுற்றினால் உன்னை உயிரோடு விடமாட்டேன் என்று மிரட்டினார். இதனால் பிரபு குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

காவல்துறையினர் இரு தரப்பினரையும் வரவழைத்து சமரசம் செய்தனர். இது தொடர்பாக பிரபுவின் உறவுப்பெண் ஒருவர் கூறியதாவது, சிவா முதலில் வீட்டுக்கு வந்து மிரட்டிய போது காவல் நிலையத்தில் புகார் செய்தோம். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிர் பலி ஏற்பட்டிருக்காது. சிவாவுக்கு தெரிந்த ஒருவர் போலீசாக உள்ளார். அவர் முதலில் நடந்த பிரச்சினையில் தலையிட்டதால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் சமரசம் செய்து விட்டு விட்டனர் என்று அவர் கூறினார்.

கொலை நடந்த சமயத்தில் அந்த பகுதியில் கோவில் திருவிழா நடந்தது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனால் அந்த தெருவே வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த தெரு இருள் சூழ்ந்தும் காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரபுவை வெட்டிக் கொன்று விட்டு கொலையாளி சிவா தப்பிச் சென்று விட்டான்.

இந்த சம்பவத்தால் கோடம்பாக்கம் காமராஜ் காலனி பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தப்பி ஓடிய சிவாவை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil