பிரபல குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கம் கோபால் மேனன் தெருவில் வசித்து வருபவர் நடிகர் தலைவாசல் விஜய். தலைவாசல் என்ற படத்தில் அறிமுகமான இவர், காதல் கோட்டை, விஷ்ணு, தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நேற்றிரவு வீட்டின் முன் பக்க பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 60 பவுன் தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஆனால் கொள்ளை நடந்த போது தலைவாசல் விஜய் வீட்டில்தான் இருந்துள்ளார். வீட்டில் இருந்த அனைவரும் அசந்து தூங்கி விட்டதால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவில்லை.
காலையில் கண்விழித்து பார்த்தபோது கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து தலைவாசல் விஜய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கோடம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
காவல்துறையினர், கை ரேகை நிபுணர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.