''மத்திய அரசு முன்வந்து தர்மபுரி மருத்துவ கல்லூரி இரண்டாவது ஆண்டு தொடரும் நிலையை உருவாக்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் தொடங்கும் மருத்துவ கல்லூரிகளுக்கு மருத்துவ கவுன்சிலின் பரிந்துரை உடனடியாக சில ஆட்சேபங்கள் இருந்த போதிலும் கிடைத்து விடுகிறது. காரணம் வெளிப்படையானது. விளக்க வேண்டியதில்லை. ஆனால் தமிழக அரசு தொடங்கி ஓராண்டு நடத்தி வரும் கல்லூரிக்கு அனுமதி வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?
எந்த கல்லூரியோ, பல்கலைக்கழகமோ, மருத்துவ கல்லூரியோ எடுத்த எடுப்பிலேயே எல்லா நிபந்தனைகளையும், விதிகளையும் பூர்த்தி செய்து விடுவது நடைமுறை சாத்தியமல்ல.
எனவே உடனடியாக இதில் மத்திய அரசு முன்வந்து தர்மபுரி மருத்துவ கல்லூரி இரண்டாவது ஆண்டு தொடரும் நிலையை உருவாக்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மாவட்டம் முழுவதும் கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.