மக்களவைத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
15-வது மக்களவைக்கு 5 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 16, 23, 30 மற்றும் மே 7, 13 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. நாடு முழுவதும் சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் கடந்த 13ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தமிழகத்தில் 72.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக நாடு முழுவதும் 1080 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு என்பதால் சில மணி நேரங்களில் முடிவுகள் தெரியவரும். வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்குகள் 43 இடங்களிலும், புதுச்சேரியில் 4 இடங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர், அவரது ஏஜென்ட் தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களும் உணவு, தண்ணீர் தவிர எந்தப் பொருளையும் உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள வளாகத்தில் செல்போன் பயன்படுத்தவும் தடை உள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் பணியில் சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சட்டசபை வாரியாக வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்படும். மேஜைக்கு இருவர் வீதம் பணியில் இருப்பார்கள். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.