''தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும்'' என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தடாலடியாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும், எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்கவுள்ள விஜயகாந்த்துக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.
தேர்தலில் மக்கள் பணத்திற்கு சோரம் போய் விடுவரோ என பயந்த நேரத்தில், தன்னிச்சையாக ஓட்டளித்து தமிழகம் பெருமை பெற சிறப்பாக பணியாற்றினர் என்றும் நடக்க இருந்த தவறுகளையும், தில்லுமுல்லுகளையும் தடுத்த பெருமை தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்துள்ளது என்றும் கூறினார்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவது முதல்வேலை என கூறிய ஜெயலலிதாவுக்கு பாராட்டு கூறிய இளங்கோவன், தடையில்லாத மின்சாரம் இருந்தாலே தொழில் வளம் பெறும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர் என்றார்.
தேர்தலில் 63 நாயன்மார்களாக காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியினர் என்றும் தற்போது பஞ்ச பூதங்களாக வெற்றி பெற்றுள்ளனர் என்றும் இளங்கோவன் கிண்டல் அடித்தார்.
காங்கிரஸ் தோல்வியை ஆராய்வது இப்போது சரியாக இருக்காது என்று கூறிய இளங்கோவன், இந்நிலை ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும் என்றும் இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் கூறினார்.
தங்கபாலு பதவி விலக மேலிடம் உத்தரவிட்டது என்று தெரிவித்த இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை சோனியா காந்தி விரைவில் அறிவிப்பார் என்றார்.
சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சகவாச தோஷம் தான் முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், மக்கள் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் குடும்ப அரசியல் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தேர்தலில் வாக்களித்தனர் என்றும் கூறினார்.