''கருணாநிதியிடம் அரசியல் பாடம் கற்ற நான் தோல்விகளை கண்டு துவண்டு விடமாட்டேன்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் சரத்குமார் பேசுகையில், 5 மாத காலம் நான் எங்கோ சென்று விட்டேன். ஏதோ தோல்வி பயத்தில் ஓடி விட்டான். இனி வரமாட்டான் என்று நினைக்கிறார்கள். கட்சி தொடங்கிய 2 ஆண்டு காலத்தில் 2 தோல்விகள் அடைந்தாலும் அது எல்லாம் சோதனை காலம்தான்.
பல தோல்விகளை, பல சோதனைகளை சந்தித்தாலும் துவண்டுவிட மாட்டோம். ஒரு மனிதன் எந்த அளவு தோல்விகளையும், சோதனைகளையும் சந்திக்கிறானோ அந்த அளவிற்கு வெற்றி நோக்கி அவன் இலக்கு இருக்கும். வெற்றியை மட்டும் கண்டவனை, திடீரென ஒரு தோல்வி சாய்த்து விடும்.
நமது இலக்கு 2011ஆம் ஆண்டு ஆட்சியை பிடிப்போம் என்பதாக இருக்க வேண்டும். 234 தொகுதிகளில் வெற்றி என்பதில்லை. நமது உதவியோடு நல்லாட்சி அமைய வேண்டும். அரசியலில் 85 சதவீத மக்களை சந்தித்த ஒரே கட்சி, சமத்துவ மக்கள்கட்சிதான்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்தேன். மக்கள் எனக்களித்த நம்பிக்கை இனி வெற்றி என்ற நம்பிக்கையை தந்து இருக்கிறது.
நான் நடித்த “ஜக்குபாய்” சினிமா விழாவில் கருணாநிதி என்னை மாற்று அணியில் இருந்தாலும், மிகச்சிறந்த பண்பாளர் என்று கூறினார். அவரை அப்பா என்றுதான் அழைக்கிறேன். துரோணாச்சாரியார் போல் நான் அவர் அருகில் இருந்தும், அவரை பார்த்தும் அரசியல் பாடம் கற்றுக் கொண்டேன்.
எதிர்க்கட்சியோ, எதிராளியோ நமது பண்பை போற்றும் அளவிற்கு நாம் பெயர் எடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் 100 அடியை தாண்டி விட முடியாது. தேவையான பயிற்சி, முயற்சி, உழைப்பு ஆகியவை வேண்டும். வியூகம் அமைத்து வெற்றி இலக்கை நாம் அடையும் காலம் வெகுதூரமில்லை என்று சரத்குமார் பேசினார்.