திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கூறி வந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தேசிய கட்சியுடன் இனிமேல் கூட்டணி கிடையாது என்று இன்று அறிவித்துள்ளார்.
சென்னையில் பா.ம.க சார்பில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற செயல்திட்ட விளக்க அறிக்கை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
தனித்தே தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றும் அந்த முடிவின் அடிப்படையில் இந்த புதிய செயல் திட்டத்தை தயாரித்துள்ளோம் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
புதிய செயல் திட்டத்தை பற்றி அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அதன் பிறகு இறுதி அறிக்கை தயாரித்து வெளியிடுவோம் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் தேவைப்படுகிறது என்று கூறிய ராமதாஸ், புதிய தமிழ்நாட்டை கட்டமைக்கும் வகையில் இந்த ஆவணத்தை தயாரித்துள்ளோம் என்றார்.
பொதுநலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.