தேசிய கொடியை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் பிணை மனுவின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழர் தேசிய பொதுவுடமை கட்சி, தமிழர் தேசிய இயக்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது இந்திய தேசிய கொடியை எரிக்க முயற்சித்ததாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் தமிழரசன் உள்பட 8 பேர் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கர்ணன், பிணை வழங்க நிபந்தனை ஒன்றை விதித்தார். 'இந்தியா என்னுடைய நாடு, இந்தியாவை நேசிக்கிறேன், தேசிய கொடியை மதிக்கிறேன்' என்று உத்தரவாதம் வழங்கி மனுதாக்கல் செய்யவேண்டுமென்று 8 பேருக்கும் அறிவுறுத்தியிருந்தார். இவ்வாறு உத்தரவாதம் வழங்கினால் பிணை மனுவை பரிசீலிக்கலாம் என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கர்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 8 பேர் தரப்பிலும் இந்த உத்தரவாதம் வழங்கப்படவில்லை.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் வழக்கு விசாரணையை தள்ளி வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் இந்த மனு மீதான விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.