தி.மு.க போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி, நாளை தொடங்குகிறது. போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களிடம் நாளையும், நாளை மறுநாளும் நேர்காணல் நடத்தப்படுகிறது. 4ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட தி.மு.க தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தி.மு.க 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில், வேட்பாளர் தேர்வில் தி.மு.க.வும், காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன.
தி.மு.க சார்பில் போட்டியிட சீட் கேட்டு சுமார் 2 ஆயிரம் பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களிடம் 5 நாட்கள் தொகுதி வாரியாக நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் நேர்காணலை 2 நாட்களில் முடிக்க தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடக்கிறது.
நாளை காலை கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கும், மாலையில் மத்திய சென்னை, கரூர், பெரம்பலூர், அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது.
நாளை மறுநாள் காலையில் நீலகிரி (தனி), பொள்ளாச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளுக்கும் மாலையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வடசென்னை, தென்சென்னை, நாகை, தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
நேர்காணல் முடிந்ததும், வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் கருணாநிதி வரும் 4ஆம் தேதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.