திருமணத்தில் மாப்பிள்ளை காணாததால் திடீர் மணமகனான தம்பி
, திங்கள், 10 பிப்ரவரி 2014 (16:35 IST)
பண்ருட்டி அருகே திருமண நேரத்தில் மணமகன் காணாமல் போனதால், அவரது தம்பி மாப்பிள்ளையானார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிகுப்பத்தை சேர்ந்தவர் ராஜு. விவசாயியான ராஜுவுக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த மாளவிகா (பெயர் மாற்றம்) என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று (9-ந்தேதி) முத்தாண்டிகுப்பத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.திருமணத்துக்காக பத்திரிகைகள் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு வினியோகிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் பெண் அழைப்பு நடந்தது. அன்று இரவில் மாப்பிள்ளை - பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்திருந்தனர்.திருமண நாளான நேற்று அதிகாலையில் அந்த மண்டபத்தில் இருந்து மணமகன் ராஜு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். முகூர்த்த நேரம் நெருங்கியும் ராஜு திரும்பவில்லை. அதனால் கல்யாண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ராஜுவை பல இடங்களில் தேடியும் காணவில்லை.எனவே மாப்பிள்ளை - பெண் வீட்டார், உறவினர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் ராஜுவின் தம்பியும், முதுகலை பட்டதாரியுமான ஆனந்துக்கு மாளவிகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் சேர்ந்து எடுத்த இந்த முடிவுக்கு ஆனந்தும் கட்டுப்பட்டார்.உடனே ஆனந்துவை மணமகனாக்கி திருமண மேடையில் அமர்த்தினர். உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் அச்சதை தூவி வாழ்த்த மணமகள் கழுத்தில் ஆனந்து தாலி கட்டினார். இதனால் கல்யாண மண்டபம் மீண்டும் களை கட்டியது.