திமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சிப் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி திடீரென விலகி உள்ளார்.
இது தொடர்பாக அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கையால், உள்கட்சி ஜனநாயகத்தில் எனது சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள கழகத்தின் துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன்.
வாழ்க உள்கட்சி ஜனநாயகம்!இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
எழும்பூர் பகுதி வட்டச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம். நாதன், பேச்சாளர் எழும்பூர் கு. வீராசாமி ஆகியோர் திமுகவின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால் திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் க. அன்பழகன் கடந்த 1ஆம் தேதியன்று அறிவித்திருந்தார். பரிதி இளம்வழுதி புகாரின்பேரிலேயே இவர்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எழும்பூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியிடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதி தோல்வியடைந்தார். இப்படி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போகும் அளவுக்கு உள்ளடி வேலைகள் பார்த்தது இந்த மூவரும்தான் என்று பரிதி குற்றம்சாட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் எழும்பூர் பகுதியில் பரிதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக இந்த மூவரும் செயல்படுவதாகக் கூறப்பட்டது. இதையும் புகாராக தெரிவிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அம்மூவரும் ஸ்டாலினைப் பார்த்து நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து மூவரும் கட்சியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர் என்று அன்பழகன் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவித்தார்.
இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பரிதி இளம்வழுதி விலகியுள்ளதாக தெரிகிறது.