ஈரோடு அருகே தாயை பிரிந்த குட்டியானையை பராமரிக்க டாப்ஸிலிப்பில் இருந்து இரண்டு பாகன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் கடந்த மாதம் ஆறு மாதம் மதிக்கதக்க ஆண் குட்டியானை ஒன்று தன் தாயை பிரிந்து பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்திற்குள் சென்று அங்கு மீனவர்கள் விரித்து வைத்திருந்த வலையில் சிக்கி தவித்தது.
இது குறித்து தகவல் தெரிந்ததும் பவானிசாகர் ரேஞ்சர் சதாசிவம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குட்டியானையை மீட்டனர்.
அதன் தாயிடம் சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் தாயை பிரிந்த குட்டியானையை மீண்டும் அதன் தாயிடம் சேர்க்க முடியவில்லை. இந்த யானைக்குட்டியை வண்டலூர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் தலைமை வன உயிரின அதிகாரியிடம் இருந்து உத்திரவு வராத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக பவானிசாகர் வனப்பகுதியிலேயே இந்த யானை குட்டி வைத்து பராமரித்து வருகின்றனர்.
யானை குட்டி தாயை பிரிந்த காரணத்தாலும் தனியாக இருப்பதாலும் போதிய உணவு இல்லாத காரணத்தாலும் சோர்வடைந்தது. இந்த நிலையில் இந்த யானைக்குட்டியை பராமரிக்க வால்பாறை வனப்பகுதி டாப்ஸிலிப்பில் இருந்து மாரியப்பன், முருகன் என்ற இரு பாகன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் குட்டியானையோடு இருந்து அதை தீவிரமாக கண்காணித்து பராமரித்து வருகின்றனர்.