"மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கட்டாயமாக கற்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
சட்டப் பேரவையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், ஏழைகளுக்கும், கிராமத்தினருக்கும் தரமான கல்வி கிடைப்பதில்லை. எல்லோருக்கும் ஒரே சமமான, சீரான சமச்சீர் கட்டாயக் கல்வி வழங்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் 14 சதவீதம் தான் கல்விக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும்.
மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். போதிய ஆசிரியர்கள் இல்லாததால் தான் அனைவரும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அரசு அறிவித்துள்ளது, ஆனால் அது நடைமுறையில் இல்லை. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேர்தலுக்கு முன் சமச்சீர் கல்வி வரும் என்று முதலமைச்சர் கூறினார். பின் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தரப்பட்டுள்ளது. அதன்பின் விஜயகுமார் குழு அமைத்தது தேவையில்லை. சமச்சீர் கல்வி வராது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அது நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா? என்பதை அறிவிக்க வேண்டும்.
தமிழ் ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் அது நடைமுறையில் இருக்கிறதா? ஆசிரியர் தேர்வு மாநில அளவில் பதிவு மூப்பு என்பதை மாவட்ட அளவிலேயே கொண்டுவர வேண்டும். இதனால் 28 மாவட்டங்கள் பாதிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அதனை அரசு தான் ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 2006ஆம் ஆண்டு, இது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. மெட்ரிக் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக ஆரம்பித்து 10ஆம் வகுப்பு வரை தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்க அரசு முயற்சித்து வருகிறது. அதன்படி, 1 முதல் 4-ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி கற்றுக் கொடுக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.