ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனர்வகள் 42 பேரை சிறிலங்க கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
700க்கும் அதிகமான படகுகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர், 8 மீன்பிடி இயந்திர படகுகளையும், 42 மீனவர்களையும் கைது செய்து இலங்கை தலைமன்னாருக்கு கொண்டு சென்றுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஒருபுறம், நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை அழைத்ததற்காக நல்லெண்ண நடவடிக்கையாக தமிழக மீனவர்கள் 26 பேர் விடுவிக்கப்பட்டாலும், மறுபுறம் தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.