உயர் நீதிமன்றத்தில் புகுந்து வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த காரணமாக இருந்த காவல்துறை துணை ஆணையர் விசுவநாதன், இணை ஆணையர் ராமசுப்பிரமணியன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 19ஆம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே பயங்கர தோதல் நடந்தது. இந்த மோதல் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் முகோபாத்யாயா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த ஆரம்பித்தது காவல்துறை அதிகாரிகளின் கூட்டு முடிவு என்றும் காவல்நிலையம் தீ வைக்கப்பட்டதால் வழக்கறிஞர்களை விரட்ட 2வது தடவை தடியடி நடத்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தர விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இடைக்கால தீர்ப்பளித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த காரணமாக இருந்த காவல்துறை துணை ஆணையர் விசுவநாதன், இணை ஆணையர் ராமசுப்பிரமணியன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.
அதே சமயம் பொதுமக்கள் நலன் கருதி வழக்கறிஞர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.