தாமிரபரணி நதி மட்டுமே தகராறு இல்லாத நதியாக உள்ளது என்று கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு, தாமிரபரணி நதியைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள 5 ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற நல்லகண்ணுக்கு தாமிரபரணி அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் மைதானத்தில் நேற்றிரவு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நல்லகண்ணு, மனிதன் இன்று தான் அனுபவிக்கும் இயற்கை வளங்களை எதிர்கால சமுதாயத்திற்கும் விட்டுச் செல்ல வேண்டும். அதை அழித்துவிட்டு செல்லக் கூடாது. தாமிரபரணி ஆறு தமிழ் வளர்த்த பெருமை உடையது. ஆற்றங்கரையோரங்களில் தமிழ் மொழி செழித்து வளர்ந்துள்ளது. அத்தகைய நதிகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்று காவிரி, வைகை, பாலாறு ஆகிய நதிகள் அழிந்து வருகின்றன. இந்த நதிகளில் எல்லாம் இப்போது தண்ணீர் வருவதில்லை. காவிரி நதியில் ஆடிப் பெருக்குக்குக் கூட தண்ணீர் வருவதில்லை. பாலாறு பாழ்பட்டு விட்டது. வைகைக்கும் சிக்கல் வந்து விட்டது.
தாமிரபரணி நதி மட்டுமே தகராறு இல்லாத நதியாக உள்ளது. செல்வம் செழிக்கும் ஜீவநதி தாமிரபரணி. அது செல்லும் இடங்களில் எல்லாம் வளமையை ஏற்படுத்தி செல்கிறது. ஆனால் அதன் தன்மை இன்று கெட்டு விட்டது. அதைப் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாமிரபரணியை பாதுகாக்க வேண்டிய கடமை நாம் அனைவருக்கும் உள்ளது. இங்கு மணல் அள்ளுவதற்கு எதிராக நான் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதைக் கண்டித்து சிலர் சுவரொட்டிகளை ஒட்டினர். அதை யார் ஒட்டினார்கள் என்பது தெரியும். அவர்கள் 'என்னை அரசியலை விட்டு ஓடு' என அதில் கூறியிருந்தார்கள். அவர்கள் பிறப்பதற்கு முன்பே நான் பிறந்தவன், அரசியலுக்கு வந்தவன்.
தாமிரபரணியை பாதுகாக்கும் கடமை நமக்கு உண்டு. தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்க நாம் உறுதி கொள்ள வேண்டும். நீதிமன்ற தடையாணையை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை முறியடிக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். நாம் அனைவரும் உறுதியாக இருந்தால்தான் தாமிரபரணியை பாதுகாக்க முடியும் என்று நல்லகண்ணு கூறினார்.