''அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் கரும்புக்கு மத்திய அரசின் பரிந்துரை விலையை தவிர கூடுதலாக விலை தர மாட்டோம் என்று கூறிய ஜெயலலிதா இன்று டன்னுக்கு ரூ.2000 வழங்க வேண்டும் என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது'' என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைந்தபோது 09.11.2001ஆம் நாள் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை மட்டும் தரப்படும், மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு தெரிவித்தவர் ஜெயலலிதா.அ.தி.மு.க. அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் படி 2001-02 முதல் 2004-05 வரை 4 ஆண்டுகாலம் மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையான ரூ.795 மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிய ஜெயலலிதா இன்று டன் ஒன்றுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.கரும்பு விலை நிர்ணயம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையோடு மாநில அரசு கூடுதலாக பரிந்துரை விலை வழங்கலாம் என 05.05.2004 அன்று தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பு உடனடியாக அமல்படுத்தாமல் 1 ஆண்டு 4 மாத காலம் ஆட்சியில் இருந்து விட்டு, 2006ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு 1 டன் கரும்புக்கு 9 சத கட்டுமானத்திற்கு ரூ.1,014 வழங்கப்படும் என்று 2005-06ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால் வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்த பட்ச விலையான ரூ.795 மட்டும்தான் வழங்கப்பட்டது.2009-10
ஆம் ஆண்டிற்கு 9.5 சத கட்டுமானத்திற்கு 1 டன் கரும்பிற்கு மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை ரூ.1,077.60, மாநில அரசின் பரிந்துரை விலை கட்டுமானத்தின் அடிப்படையில் சேர்த்து ரூ.1,550 என நிர்ணயம் செய்து, இந்த விலையை கூட்டுறவு, பொதுத்துறை ஆலைகள் மட்டுமல்ல, தனியார் சர்க்கரை ஆலைகளும் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.மத்திய பிரதேசத்திலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் கரும்பு கொள்முதல் விலை தமிழக அரசு அறிவித்துள்ளதை விட குறைவு. 9.5 சத கட்டுமான அடிப்படையில் மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை மற்றும் மாநில அரசின் பரிந்துரை விலை, வண்டி வாடகை, சராசரி பிழிதிறன் சேர்த்து டன்னுக்கு ரூ.1,550 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9.5 சத கட்டுமானத்தை விட கூடுதலாக இருக்குமானால் அதிகமான விலை வழங்கப்படும்.சராசரி கட்டுமானத்தை விட கூடுதல் கட்டுமானம் கிடைக்கும் ஆலைகளில் ரூ.1,550-க்கு மேலும் கூடுதலான விலையினை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கினால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறையை சேர்ந்த 17 ஆலைகளுக்கும் நட்டம் ஏற்படும் என்றாலும் விவசாயிகளின் நலன் கருதி கரும்புக்கு கூடுதல் விலை வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.பயிர் சேதம் ஏற்பட்டதற்காக, இந்த பயிர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையையே தரமாட்டேன் என்று சண்டித்தனம் செய்த ஜெயலலிதா இப்பொழுது 1 டன் கரும்புக்கு ரூ.2,000 கேட்கிறார்.முதலமைச்சர் கருணாநிதி விவசாயிகளின் பாதுகாவலர், விவசாயிகள் பாதிக்கப்படாமல் அவர்களை காப்பாற்றக் கூடியவர். விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகிற போதெல்லாம் உடனடியாக நிவாரணம் வழங்கி விவசாயிகளை மகிழ்ச்சியில் வைத்துக் கொண்டிருப்பவர். எனவே, ஜெயலலிதாவின் வார்த்தைகளை நம்பி விவசாயிகளும், மக்களும் ஏமாற மாட்டார்கள் என்று வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.