''ஜெயலலிதாவுக்கு அறிக்கை விட கொசு தான் கிடைத்தது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதாகவும், அதனால் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாகவும் கூறி அதற்குக் கண்டனம் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள். அவர் இருப்பதைக் காட்டிக்கொள்ள அன்றாடம் ஒரு அறிக்கை விட்டாக வேண்டும். அதற்கு பொருள் தேடி எங்கே தான் அவர் போவார்? இன்றைக்கு அவருக்கு கிடைத்தது கொசுதான்!
இருக்கவே இருக்கிறார்கள் கட்சி தொண்டர்கள்! அவரா ஆர்ப்பாட்டம் நடத்தப்போகிறார்? ஏடுகளில் அவர் பெயரில் புகைப்படத்தோடு ஒரு அறிக்கை வெளி வந்துவிட்டது அல்லவா? அதுவே போதும்! எனினும் கொசுக்களை ஒழிப்பதற்கான முயற்சியில் சென்னை மாநகராட்சியும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் கடுமையாக ஈடுபட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.