வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் தமிழக அரசு சார்பில் ரோப் கார் அமைக்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் வழங்க வல்லுனர் குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையினை ஏற்று, வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) அமைப்பது என அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தயாரித்தல், ஒப்பந்தப்புள்ளி பரிசீலனை செய்தல், ஒப்பந்ததாரர் நிர்ணயம் செய்தல் போன்றவற்றிற்கு தக்க ஆலோசனைகளை வழங்கிட வல்லுனர் குழு ஒன்றினை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இக்குழுவில் இந்திய தொழில்நுட்பக்கழகம்-கட்டுமான ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் பேராசிரியர்களும், பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவற்றின் அனுபவம், மிக்க அலுவலர்களும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும் இடம்பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.