சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக தலா 100 இடங்கள் இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், அடுத்த ஆண்டு நிச்சயமாக கிடைத்துவிடும் என்றார்.
மருத்துவ படிப்புக்கான பொது கலந்தாய்வை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய், நேற்று தொடங்கிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குரிய கலந்தாய்வில் சிறப்பு பிரிவினருக்கு நடந்த கலந்தாய்வில் 49 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன என்றார்.
தமிழகத்தில் உள்ள 17 அரசு கல்லூரிகள் மூலம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன என்றும் இதில் சிறப்பு பிரிவுக்கான 49 இடங்கள் போக மீத முள்ள 1,604 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தவிர 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் திருச்சியில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரிக்கு இன்னும் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறிய அமைச்சர் விஜய், அதுபோக மற்ற 9 கல்லூரிகள் மூலம் 650 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசுக்கு கிடைக்கிறது என்றார்.
திருச்சியில் உள்ள கல்லூரிக்கு விரைவில் அனுமதி கிடைத்து விடும் என்றும் அவ்வாறு கிடைத்தால் 115 இடங்கள் கூடுதலாக அரசுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக தலா 100 இடங்கள் இந்த ஆண்டு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிய அமைச்சர் விஜய், அடுத்த ஆண்டு நிச்சயமாக கிடைத்துவிடும் என்றார்.
2வது கட்ட மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.