சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு செய்யும் கட்டடத்தின் 3வது மாடியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.
சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மூர்மார்க்கெட் அருகே டிக்கெட் முன்பதிவு செய்யும் கட்டடம் உள்ளது. இக்கட்டடத்தில் 3வது மாடியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்கள் ஏராளமாக இருப்பதால் எப்போதும் பயணிகள் கூட்டமும் அதிகமாக இங்கு இருக்கும்.
இன்று காலை 10.30 மணியளவில் மூன்றாவது மாடியின் சன்செய்டு பகுதியில் லேசான புகை கிளம்பி உள்ளது. பின்னர் இந்த புகை தீயாக எரிய ஆரம்பித்ததை தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து சன்செய்டு பகுதியில் எரிந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சன்செய்டு பகுதியில் உள்ள குப்பைகள் மீது யாரோ ஒருவர் சிகரெட்டை அணைக்காமல் போட்டதால் தீப்பிடித்திருக்கலாம் என்று தெரியவந்தது.