வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், 2 நாள்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று நள்ளிரவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. இடி மின்னலுடன் மழை பெய்ததால் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
புறநகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
சென்னையில் புரசைவாக்கம், அடையாறு, மயிலாப்பூர், தி.நகர், மாம்பலம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதனிடையே சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.