போக்குவரத்து துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையின்படி ஒரு வேனில் 30 பேரை ஏற்றி செல்ல அனுமதி வழங்கக் கோரியும் தனியார் வேன் உரிமையாளர்கள் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம் பள்ளிவாகன விபத்தில் 9 குழந்தைகள், ஒரு ஆசிரியை உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகின்றன.
அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்லும் வேன்கள், ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, தகுதி சீட்டு இல்லாத வாகனங்கள் மீது போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தகுதி இல்லாத பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி குழந்தைகள் ஏற்றி செல்லும் வேன்கள் இன்று முதல் 11ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
சென்னை, புறநகர் பகுதிகளில் பள்ளி வேன்கள் வேலை நிறுத்தத்தால் மாணவர்கள் பாதிப்படைந்தனர். தாம்பரம், புழல், செங்குன்றம், படப்பை, நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேன்கள் ஓடாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
ஆட்டோக்கள், கார்களிலும் பெற்றோர்கள் அழைத்து சென்றனர். சிலர் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றனர். இதனால் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் தாமதமாக சென்றனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் சுமார் 2,500 மேக்ஸிகேப் வேன்கள் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அந்த வாகனங்கள் முழுவதும் இன்று ஓடவில்லை.
இது குறித்து தமிழ்நாடு வாகன உரிமையாளர் சங்கத்தின் செயலர் சீனிவாசன் கூறுகையில், வேதாரண்யம் சம்பவத்தை காரணம் காட்டி ஒரு வேனுக்கு 12 பேர் வரை மட்டுமே ஏற்றிச் செல்ல போக்குவரத்துத்துறை அறிவுறுத்துகிறது.
இதனால், எங்கள் தொழிலில் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது. இப்போது 20 குழந்தைகள் வரை ஏற்றிச் செல்கிறோம். மேலும் இன்சூரன்ஸ், பர்மி ட் ஆகிய சான்றிதழுடன் பொறுப்பாகத்தான் வேனை இயக்குகிறோம். ஆனால் சோதனை என்ற பெயரில் தொடர்ந்து அபராதம் விதிக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட நபருக்கு அதிகமாக உள்ள குழந்தைக்கு ரூ.300 அபராதம் விதிக்கின்றனர்.
ஏற்கனவே 2005இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி ஒரு வேனில் 30 பேர் வரை ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என்றார்.