சென்னையில் ஜான் டேவிட் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதையடுத்து ஜான் டேவிட் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜான் டேவிட், பெற்றோர் தலைமறைவானார்கள். தேடுதல் வேட்டைக்காக கரூர் சென்ற காவல்துறையினருக்கு ஜான் டேவிட்டுக்கு திருமணம் ஆகி சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை விரைந்துள்ள தனிப்படையினர் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளனர். தேடுதல் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து வழக்கறிஞர் ஒருவர் மூலம் ஜான் டேவிட் குடும்பத்தினர் காவல்துறையினருடன் பேசி உள்ளதாக தெரிகிறது.
அப்போது, ஜான் டேவிட்டை ஒப்படைத்து விடுவதாகவும், தேவையின்றி உறவினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் கரூரில் உள்ள ஜான் டேவிட் பெரியம்மா, சித்தி ஆகியோரிடம் அவரது தாய் எஸ்தர் லட்சுமி அடிக்கடி பேசி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் எஸ்தர் லட்சுமி சென்னையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் ஜான் டேவிட் இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனால் இன்னும் 2 நாட்களில் ஜான் டேவிட் கைது செய்யப்படலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.