சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி பொதுமக்கள், மாதர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அனகாபுத்தூரை சேர்ந்த லதா என்பவரின் மகள் வரலட்சுமி. இதே பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அறிவியல் பாடத்திற்காக இந்த பள்ளியில் பணிபுரியும் ராஜேஷ் என்ற ஆசிரியரிடம் டியூஷன் படித்து வந்தார் வரலட்சுமி.
கடந்த 6 ஆம் தேதி அன்று ராஜேஷ், வரலட்சுமியை டியூஷனுக்கு அழைத்திருக்கிறார். அப்போது மற்ற மாணவர்களை அனுப்பிவிட்டு வர லட்சுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சிடைந்த மாணவி வரலட்சுமி அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதை வெளியே சொல்லக்கூடாது என்று ராஜேஷ் மிரட்டியதால் வரலட்சுமி மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே வரலட்சுமி சோகமாக இருப்பதைப் பார்த்து அவரது தாயார் விசாரித்திருக்கிறார். அப்போது நடந்ததை சொல்லி வரலட்சுமி அழுதுள்ளார்.
இதையடுத்து பள்ளி ஆசிரியர் மீது புகார் கூறப்பட்டது. இந்த நிகழ்வு மாதர் சங்கத்திற்கும் தெரிந்து அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் இந்த பள்ளியை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.