செருப்பாக இருப்பேன் - விஜயகாந்த் ஆசை
, சனி, 4 ஆகஸ்ட் 2012 (16:20 IST)
மக்கள் நலனுக்காக யார் பாடுபட்டாலும் அவர்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன் என்று கூறிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.விருதுநகரில் தே.மு. தி.க. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் தற்போது முதல்வர் கொட நாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்று குற்றம்சாற்றினார்.முதல்வர் பொறுப்பேற்ற உடன் 3 மாதங்களில் மின் வெட்டு சரிசெய்யப்படும் என்று கூறினார் ஜெயலலிதா. ஆனால் தற்போது மின்வெட்டு மீண்டும் 5 மணி நேரமாக்கப்பட்டு உள்ளது என்றார் விஜயகாந்த்.காவலர்கள் சம்பள உயர்வு கேளுங்கள், அதற்காக போராடுங்கள், ஆனால் மக்களிடம் ஏன் லஞ்சம் கேட்கிறீர்கள் என்று கூறிய விஜயகாந்த், முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் சென்று விட்டால் கொலை, கொள்ளை குற்றங்களை கண்டுபிடிப்பது யார் என்று வினா எழுப்பினார்.மக்கள் நலனுக்காக முதல்வர் திட்டங்களை நிறைவேற்றினால் அவருக்கு நானும், என்னுடைய தொண்டர்களும் சல்யூட் அடிப்போம் என்றார் விஜயகாந்த்.மக்கள் நலனுக்காக யார் பாடுபட்டாலும் அவர்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன் என்று கூறிய விஜயகாந்த், மக்கள் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.எதற்கும் பயப்பட மாட்டான் என்று தெரிவித்த அவர், என்னை பிடித்து சிறையில் அடைத்தாலும் அதைப்பற்றி கவலைப்படுபவன் அல்ல என்றார்.இலங்கை தமிழர்கள் செத்து மடிந்த பின்பு தற்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார் என்றும் இதனால் என்ன பயன் என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.காமராஜர் உயிரோடு இருக்கும்போது காமராஜர் ஆட்சியை கொண்டு வராதவர்கள் இப்போது காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது என்றார் விஜயகாந்த்.