சென்னை- மதுரை இடையே இன்று முதல் துரந்தோ இரயில்!
, சனி, 15 டிசம்பர் 2012 (11:31 IST)
சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கும் புதிதாக துரந்தோ எக்ஸ்பிரஸ் இரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.துரந்தோ இரயில் என்பது வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் புயல் வேக இரயில் ஆகும். இதில் அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும். இந்த இரயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, இந்த இரு இரயில்களும் இன்று முதல் இயக்கப்படுகின்றன.சென்னை-மதுரை இடையேயான துரந்தோ இரயில் (22205) திங்கள், புதன் தோறும் சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக சென்று மறுநாள் காலை 7 மணிக்கு மதுரையை சென்று அடையும்.இதேபோல் மறுமார்க்கத்தில், அந்த இரயில் (22206) மதுரையில் இருந்து செவ்வாய், வியாழன் தோறும் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து அடையும். இந்த இரயிலின் பயண நேரம் 8 மணி 30 நிமிடங்கள்.சென்னை-திருவனந்தபுரம் துரந்தோ இரயில் (22207) சென்ட்ரலில் இருந்து செவ்வாய், வெள்ளி தோறும் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்று அடையும்.மறுமார்க்கத்தில் அந்த இரயில் (22208) திருவனந்தபுரத்தில் இருந்து புதன், சனி தோறும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து அடையும்.இந்த இரயிலின் பயண நேரம் 12 மணி 45 நிமிடங்கள் ஆகும். சாதாரணமாக சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில்களின் பயண நேரம் 16 மணி 45 நிமிடங்கள்.இந்த இரு துரந்தோ எக்ஸ்பிரஸ் இரயில்களிலும் தலா 12 குளு குளு வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இதில் முதல் வகுப்பு ஏ.சி. ஒரு பெட்டியும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் மூன்றும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் ஒன்பதும் இடம்பெற்று இருக்கும்.இந்த இரண்டு துரந்தோ இரயில்களின் தொடக்க விழா சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இன்று மாலை 5.15 மணிக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு கொடி அசைத்து துரந்தோ இரயில்களை தொடங்கி வைக்கிறார்.