கல்லூரிக்கு சென்ற நான்கு மாணவிகள் காணாமல் போன நிகழ்வு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராயர் நகரை சேர்ந்த கீதாபிரியா (18) , கொரட்டூரை சேர்ந்த ஸ்வேதா (17) , கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த சங்கீதா, முகப்பேர் பகுதியை சேர்ந்த சோபனா ஆகியோர் அமைந்தகரையில் உள்ள பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
தோழிகளான இவர்கள் நான்கு பேரும் நேற்று கல்லூரி முடிந்து வீடு திரும்பவில்லை. பிள்ளைகள் வீடு திரும்பாததை அறிந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து உடனடியாக பெற்றோர்கள் அமைந்தகரை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாணவிகள் நான்கு பேரும் கடைசியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காணப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் அங்கிருந்து வெளியூருக்கு சென்றிருக்கக் கூடும் என்றும் காவல்துறையினர் சந்தேக்கின்றனர். ஆனால் எந்த ஊருக்கு அவர்கள் சென்றார்கள் என்பது தெரியவில்லை. எனவே வெளிமாவட்ட காவல் நிலையங்களுக்கு இது குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவிகள் 4 பேர் ஒரே நேரத்தில் மாயமாகி விட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.