கல்லூரியில் படிக்கும் மாணவர்களுடன் பழகுவதை பெற்றோர்கள் கண்டித்ததாலும், ஆசிரியர்கள் திட்டியதாலும் வீட்டை விட்டு ஓடி வந்ததாக சென்னையில் மாயமான மாணவிகள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
சென்னை அமைந்தகரை மேத்தாநகரில் பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரியில் தியாகராய நகர் கண்ணம்மா பேட்டையை சேர்ந்த கீதாபிரியா (18), கொரட்டூரை சேர்ந்த ஸ்வேதா (18), முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ஷோபனா (18), கீழ்க்கட்டளையை சேர்ந்த சங்கீதா (18) ஆகியோர் முதலாமாண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள் நான்கு பேரும் 2 தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவிகள் 4 பேரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றதும், அங்கு திருப்பூர் செல்லும் பேருந்தில் ஏறியதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள மாணவிகளின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அப்போது ஊத்துக்குளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு 4 மாணவிகளும் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் மாணவிகளை மீட்டனர்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்களுடன் பழகுவதை பெற்றோர்கள் கண்டித்ததாலும், கல்லூரி ஆசிரியர்கள் திட்டியதாலும் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் கையில் பணம் தீர்ந்து விட்டதால் ஊத்துக்குளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை சென்னைக்கு அழைத்து வர தனிப்படை காவல்துறையினர் திருப்பூர் விரைந்துள்ளனர்.