சென்னையில் நாய்களை பிடிப்பதற்காக 2 புதிய வாகனங்களை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னையில் நாய்களைப் பிடிப்பதற்காக வாகனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கான ஜீப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, சைதாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு மேயர் மா.சுப்பிரமணியன் வாகனங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
சென்னை மாநகராட்சியில் குப்பைகளை நவீனமுறையில் அகற்றுவதற்காக ரூ.16 கோடியில் 80 காம்பாக்டர்கள், ரூ.15.75 கோடியில் 105 சிறிய காம்பாக்டர்கள், ரூ.4.40 கோடியில் குப்பை மாற்று வளாகத்திலிருந்து குப்பை எடுத்துச்செல்ல சிறப்பு மூடிகள் பொருத்தப்பட்ட 22 பெரிய வகை டிப்பர் லாரிகள், 2.30 கோடியில் 4 குப்பை அள்ளும் இயந்திரங்கள், ரூ.68 லட்சத்தில் 4 பெரிய லோடர்கள், ரூ.84 லட்சத்தில் 7 சிறிய லோடர்கள், ரூ.33 லட்சத்தில் ஒரு இயந்திர பெருக்கி மற்றும் ரூ.35 லட்சம் செலவில் பூங்காவில் உள்ள குப்பை அள்ளும் தானியங்கி வாகனம் என கடந்த இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் ரூ.40.65 கோடி செலவில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 1.26 லட்சம் நாய்கள் சுற்றித் திரிகின்றன. சென்னை மாநகராட்சி மூலம் நாள்தோறும் 1,700 நாய்கள் பிடிக்கப்பட்டு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நாய்களை பிடிக்கும் பொருட்டு கடந்த ஆண்டு 2 நாய் பிடிக்கும் வாகனங்கள் வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ரூ.15 லட்சத்தில் கூடுதலாக 2 வாகனங்கள் வாங்கப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாய் பிடிக்கும் பணிகளுக்காக 15 ஊழியர்கள் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு ஆய்வு பணிகளுக்காக ரூ.2 கோடி செலவில் 44 வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.9.52 இலட்சத்தில் மேலும் 2 ஜீப்புகள் துறை அலுவலர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.