சென்னையில் டெலிபோன் கேபிள் வயர்கள் திருட்டு வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வாலாஜா சாலை அகலப்படுத்தப்படுவதையொட்டி கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி உள்ள கட்டிடங்களும் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தொங்கி கொண்டிருக்கும் கேபிள் வயர்களை சில திருட்டு ஆசாமிகள் அறுத்து திருடிச்செல்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து டெலிபோன் கேபிள் வயர் திருடுபவர்களை கண்காணித்து பிடிக்கும்படி திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு காவல்துறை உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு கும்பல் கேபிள் வயர்களை அறுத்துக் கொண்டிருந்தனர். அந்த கும்பலை ரோந்து படையினர் மடக்கி பிடித்தனர்.
அவர்களது பெயர் முனியப்பன், சக்தி, முருகேசன், மோகன் என்று தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றும் சிட்டிபாபு (57) என்பவர் சொல்லித்தான் நாங்கள் கேபிள் வயர் வெட்டும் திருட்டு தொழில் செய்து வந்தோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதன் பேரில் காவல்துறை உதவி ஆய்வாளர் சிட்டிபாபு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலையில் அவரை கைது செய்தனர்.