நீதிமன்றம் செல்லும் வழியில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கைதி குடும்பத்துக்கு ரூ.75 லட்சம் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளுரைச் சேர்ந்த ராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது மகன் தனசேகரன் மீது காவல்துறையினர் 7 வழக்குகள் பதிவு செய்து, கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கடந்த மாதம் 9ஆம் தேதி புழல் சிறையிலிருந்து திருத்தணி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது, முருகன் என்ற காவலரால் தனசேகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். மகனை இழந்து வாடும் எனது குடும்பத்துக்கு ரூ.75 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.