ஒரு சமையல் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோருக்கு தமிழக அரசு அளித்து வந்த ரூ.30 மானியத்தை நீடித்து வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில வரதராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் வழக்கறிஞர்கள்- காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தலைவணங்கித் தமிழக அரசு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கையை காலந்தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டெலிகாம் துறையில் நடைபெற்றுள்ள அனைத்து ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதோடு, மத்திய அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்து சி.பி.ஐ விசாரணை குந்தகம் ஏதுமின்றி நடைபெற பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் வரதராஜன்.
நீதிபதி தினகரனுக்கு எதிராக வருமானத்திற்கு மீறி சொத்துக் குவித்ததற்கான, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததற்கான புகார்கள் தகுந்த ஆதாரங்களோடு வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தாமல் தாமதிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்நிலங்களைக் கைப்பற்றி நிலமற்ற தலித் குடும்பங்களுக்கு உடனடியாக விநியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் வரதராஜன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.