சமுதாய மோதல்களின் பின்னணியில் கருணாநிதி - ராமதாஸ் குற்றச்சாற்று
, செவ்வாய், 4 டிசம்பர் 2012 (15:00 IST)
தமிழகத்தில் சமுதாய மோதல்களின் பின்னணியில் ஒரு திராவிடத் தலைவர் இருப்பதாக கூறியிருந்தேன். இப்போது சமுதாய தலைவர்கள் கூட்டத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்திருப்பதன் மூலம் அந்தத் தலைவர் தாம் தான் என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி என் மீதும் பா.ம.க. மீதும் அவதூறு குற்றச்சாற்றுக்களை சுமத்தியிருக்கிறார். சாதிய அமைப்புக்களை திரட்டி, தலித்துக்களுக்கு எதிராக அபாயகரமான அரசியல் செய்வதாகவும், இதற்காக என் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.தமிழகத்தில் சமுதாய மோதல்களின் பின்னணியில் ஒரு திராவிடத் தலைவர் இருப்பதாக கூறியிருந்தேன். இப்போது சமுதாய தலைவர்கள் கூட்டத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்திருப்பதன் மூலம் அந்தத் தலைவர் தாம் தான் என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டிருக்கிறார்.நான் சாதி அரசியல் செய்வதாக கூறும் கருணாநிதி 2001 சட்டமன்றத் தேர்தலின் போது, அனைத்து சாதித் தலைவர்களையும் இணைத்து அமைத்தக் கூட்டணிக்கு பெயர் என்ன? பச்சையான சாதிக் கூட்டணிதானே அப்போது இது சாதிக் கூட்டணியா? என செய்தியாளர்கள் கேட்ட போது சாதிக்கும் கூட்டணி என்று கூறினார். அதிகாரத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சாதி அமைப்புகளை அவர் ஒருங்கிணைத்தால் அது சாதிக்கும் கூட்டணி, பழி வாங்கலில் இருந்து காத்துக் கொள்வதற்காக சமுதாய அமைப்புகளை நாங்கள் ஒருங்கிணைத்தால் அது சாதி அரசியலா?அதே போல் பொதுவுடமைக் கட்சித் தோழர்களும், இன்னும் சில திராவிடக்கட்சித் தலைவர்களும் தலித்துக்களுக்கு எதிராக மற்ற சமுதாயங்களை பா.ம.க. ஒருங்கிணைப்பதாகவும், காதல் மற்றும் கலப்பு திருமணங்களை எதிர்ப்பதாகவும் குற்றம்சாற்றியுள்ளன. இந்தக் குற்றச்சாற்றுகளை பா.ம.க. திட்டவட்டமாக மறுக்கிறது.காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்பு மணங்களுக்கோ நாங்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பணம் பறிக்கும் நோக்குடன் பணக்கார குடும்பத்து பெண்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதையும், பின்னர் அந்தப் பெண்ணை திரும்ப ஒப்படைப்பதற்காக பெண்ணின் குடும்பத்தினருடன் பேரம் பேசி லட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கிலும் பணம் பறிப்பதை கருணாநிதியும் மற்ற கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா?நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் 32 இளம்பெண்களும், அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 37 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கட்சிகள் வழங்கும் நீதி என்ன?தர்மபுரி மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி முடித்து திரும்பும் மாணவிகளிடம் தலித் சமுதாயத்தை சேர்ந்த சிலர் அருவருக்கத்தக்க வகையில் ஈவ்டீசிங் செய்வதையும் அதை தட்டிக் கேட்போர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடரச் செய்வதையும் இந்தக் கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா? முகாந்திரமே இல்லாமல் ஒருவர் மீது பயங்கரவாத புகார் சுமத்தி, சிறையில் அடைக்க வகை செய்வதற்காக தடா, பொடா ஆகிய சட்டங்களை எதிர்த்த இந்த தலைவர்கள், முகாந்திரமே இல்லாமல் ஒருவர் மீது தலித் புகார் அளித்தாலே அவரை கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் கொடிய வன்கொடுமை சட்டத்தை எதிர்க்காதது ஏன்?இதன் நோக்கம் தலித்துக்களின் வாக்குகளை வாங்குவதாக இருந்தால் அதற்கு பெயர் சாதி அரசியல் அல்லாமல் வேறு என்ன? தருமபுரி சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுக்களை அனுப்பிய கட்சிகள் இந்த நிகழ்வுகள் குறித்தும் உண்மை கண்டறியும் குழுக்களை அனுப்பி உண்மை நிலையை உலகுக்கு தெரிவிக்கட்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.