பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த கெளரவ விரிவுரையாளர்கள் 181 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் 9,077 கல்லூரி விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொகுப்பூதியம் அடிப்படையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கெளரவ விரிவுரையாளர்கள் கடந்த 15ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் 3வது நாளாக கெளரவ விரிவுரையாளர்கள் 181 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 90 பேர் பெண்கள் ஆவர். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 6 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கெளரவ விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.