கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர். ராதாகிருஷ்ணன் செயல்படுவதற்கு தடை கோரும் வழக்கில் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இவர் பதவியிலிருந்து அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சிவபாண்டி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், தனது மனைவி, மாமியார் பெயரில் அதிக சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும், எனவே இதுதொடர்பாக தான் கொடுத்த புகாரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.முருகேசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடுகையில், ஆர்.ராதாகிருஷ்ணன் இன்னும் 4 மாதத்தில் ஓய்வு பெறுகிறார் என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழகமும், தனியாரும் சேர்ந்து பொறியியல் கல்லூரி தொடங்க சிண்டிகேட் முடிவெடுத்துள்ளது என்றும், இதனால் பாதிக்கப்பட்ட சிலர் மனுதாரர் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும், மனுதாரர் வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உடனே தலைமை நீதிபதி குறுக்கிட்டு, ராதாகிருஷ்ணன் மீது கடுமையான குற்றச்சாற்று உள்ளது என்று தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பு ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் வாதாடுகையில், 4 மாதத்தில் ஓய்வு பெறுகிறார் என்பதால் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரித்து இடைக்கால தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், ராதாகிருஷ்ணன் பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வாதாடினார்.
இதன் பிறகு இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், அரசு தரப்புகளில் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.