பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் கைதான சண்முகராஜன் சாவுக்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறைவாசிகள் உரிமைகள் அமைப்பின் இயக்குனர் புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், சென்னையை அடுத்த பனையூரில் கப்பல் கேப்டன் இளங்கோவன், அவரது மனைவி ரமணி ஆகியோர் கடந்த மாதம் 24ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக சண்முகராஜன் என்பவரை பொது மக்கள் பிடித்து நீலாங்கரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அடையார் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் சண்முகராஜனிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் 25ஆம் தேதி அதிகாலை காவலில் இருந்த சண்முகராஜன் இறந்துள்ளார். இது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை, ஆர்.டி.ஓ விசாரணை எதுவும் நடை பெறவில்லை.
காவலில் ஒருவர் மரணம் அடைந்தால், அந்த காவல் நிலைய அதிகாரிகள் மீது சட்டபடி கொலை குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் சண்முகராஜன் சாவு தொடர்பாக எந்த காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.
எனவே, சண்முகராஜனின் சாவுக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி முருகேசன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.