கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்தும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளதால், உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி ஏற்கனவே 12 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய கடலோர கிராமமக்கள், கடந்த ஞாயிறு முதல் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் 3 நாட்களாக நீடித்தது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 106 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் மிகவும் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் இடிந்தகரை பாதிரியார் பங்களாவில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போராட்ட குழு தலைவர் உதயகுமார், 3 நாளில் எங்களது கோரிக்கையை ஏற்று, அணுமின் நிலைய பணிகளை மத்திய அரசு நிறுத்தவில்லை. இதனால் உண்ணாவிரதத்தை தொடர முடிவெடுத்து உள்ளோம் என்றார்.
தமிழக அமைச்சரவை தீர்மானமும், அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், அந்த தீர்மானத்துக்கு பின்னர் தமிழக அரசு சார்பில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்று உதயகுமார் குற்றம்சாற்றினார்.
உண்ணாவிரதத்தை நீடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் என்று கூறிய உதயகுமார், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது அரசுகளின் கையில்தான் உள்ளது என்றார்.