காதலிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறிய தந்தையின் பேச்சை கேட்காத மகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஷேக் துனித் (45). ஆட்டோ டிரைவரான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பெயர் சூரியா பானு (40). இவர்களுக்கு முன்னி என்ற மகளும், ஹயாத் என்ற மகனும் உள்ளனர்.
இரண்டாவது மனைவி பெயர் பைசல் நிசா (38). இவருக்கு யாஸ்மின் என்ற 15 வயது மகள் இருந்தார். சுகைல் என்ற ஒரு மகனும் உண்டு. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டு வசித்த சலீம் அதன் பிறகு அவரை விட்டு விட்டு ஜி.கே.எம். காலனியில் 2வது மனைவி பைசல்நிசாவுடன் வசித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பைசல்நிசாவுக்கு புத்திசுவாதினம் இல்லாமல் போனது. இதனால் அவரது மகனை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு மகள் யாஸ்மினை அழைத்துக் கொண்டு முதல் மனைவி வீட்டுக்கு சலீம் வந்துவிட்டார். இங்கு யாஸ்மின் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அவரது படிப்பை சலீம் நிறுத்தி விட்டார்.
இதற்கு காரணம் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை யாஸ்மின் காதலித்ததுதான் என்று கூறப்படுகிறது. இஸ்மாயில் என்ற அந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்தவர். அவரும் யாஸ்மினும் ஒருவரை ஒருவர் விரும்பி உள்ளனர். இது சலீமுக்கும், அவரது வீட்ல் உள்ளவர்களுக்கும் தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த சலீம், மகள் யாஸ்மினை அடித்து உதைத்ததுடன் இஸ்மாயிலுடன் பழகக்கூடாது என்று கண்டித்துள்ளார். ஆனாலும் யாஸ்மின், இஸ்மாயிலுடன் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் யாஸ்மின் அவரது காதலன் இஸ்மாயிலுடன் பெரியார்நகர் பேருந்து நிலையம் அருகே பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைப் பார்த்த சலீம், யாஸ்மினை அந்த இடத்திலேயே அடித்ததுடன், இஸ்மாயிலையும் அடித்து விரட்டி விட்டு யாஸ்மினை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, மகள் யாஸ்மினுக்கு சலீம் அறிவுரை கூறியுள்ளார். தந்தையின் அறிவுரையை கேட்காத யாஸ்மின், இஸ்மாயிலைதான் காதலிப்போன், திருமணம் செய்து கொள்வேன், என்னால் இஸ்மாயிலை மறக்க முடியாது என்று எதிர்த்து பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சலீம் கத்தியால் மகள் யாஸ்மினை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் யாஸ்மின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு காவல்துறையினர் சலீமை கைது செய்தனர்.
காவல்துறையினரிடம் சலீம் அளித்த வாக்குமூலத்தில், இஸ்மாயிலை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றும், வேறு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்றும் கூறினேன். அப்போது எனது மகள் என்னை எதிர்த்து பேசினாள். இதனால் எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் அவளை கொலை செய்தேன் என்று கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.