தன்னிடம் பழகிய பெண், தன்னை காதலிப்பதாக நினைத்த என்ஜினீயர், காதலர் தினத்தன்று தன் காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை, புரசைவாக்கம், லட்சுமி தெருவை சேர்ந்த குமரகுரு என்பவரின் மகன் கார்த்திக் (24). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் கார்த்திக்.
இந்த நிலையில் கார்த்திக் டிப்ளமோ படிக்கும்போது ரேகா (பெயர் மாற்றம்) என்ற இளம்பெண் அவரிடம் நெருக்கமாக பழகி உள்ளார். இதனால் ரேகா தன்னை காதலிப்பதாக நினைத்து கார்த்திக் ஒருதலையாக காதலித்து வந்தார். அதைத் தொடர்ந்து, காதலர் தினத்தன்று ரேகாவிடம் காதலை தெரிவித்தார். அதற்கு ரேகாவோ மறுப்பு தெரிவித்துவிட்டார்.
ஆனால் ரேகாவுடன் பழகிய நினைவுகளை மறக்க முடியாத கார்த்திக், நேற்று முன்தினம் இரவில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கிய பின், உறவினர் ஒருவருக்கு ரேகாவை என்னால் மறக்க முடியவில்லை, என்னுடைய பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பினார். அதைத் தொடர்ந்து அவர் தூக்கில் தொங்கினார்.
அந்த உறவினர், உடனடியாக கார்த்திக்கின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து தூக்கில் தொங்கிய கார்த்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.