மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை சுருட்டிய 77 தலைமையாசிரியர்களை கைது செய்ய போலீஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மேலும் பல பள்ளிகளிலும் மோசடி நடந்து இருப்பதாக கூறப்படுவதால் முறைகேடு செய்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சுகாதாரமற்ற தொழில் செய்யும் நபர்களின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,850 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் இந்த உதவித்தொகை நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2010-11, 2011-12-ம் ஆண்டுகளில் 99 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 784 மாணவ, மாணவிகளுக்கு ரூ.81 லட்சம் நிதி காசோலையாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த உதவித்தொகை வழங்கியதில் மோசடி நடந்து இருப்பதாக வந்த புகாரையடுத்து மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உத்தரவின்பேரில்
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 36 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியான குழந்தைகளுக்கு உரியது என்பது தெரியவந்தது. மீதமுள்ள 64 சதவீத குழந்தைகளின் பட்டியல் போலியாக தயாரிக்கப்பட்டு, ஏறத்தாழ ரூ.68 லட்சத்து 46 ஆயிரத்து 859 மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் சில தலைமையாசிரியர்கள் உதவித்தொகையை மாணவர்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையொட்டி காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியரும், தலைமை ஆசிரியர் பொறுப்பு வகித்தவருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் மோகனூர் ஒன்றியம் ஆர்.சி.பேட்டப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ், கபிலர்மலை ஒன்றியம் பள்ளம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தலைமையாசிரியர்கள் சார்லஸ், பூபதி, தேன்மொழி மற்றும் தலைமையாசிரியர் (பொறுப்பு) சரவணன் ஆகிய 4 பேரையும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருள்மொழி தேவி ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்தார்.
இந்த மோசடி தொடர்பாக சென்னை தொடக்க கல்வி அதிகாரிகள், சர்ச்சைக்குரிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில், 74 தலைமையாசிரியர்கள் ஒரே நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 63 தலைமையாசிரியர்கள் அரசு பள்ளிகளை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 11 பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்தவர்கள்.
இவர்களையும் சேர்த்து இதுவரை சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் சரவணன் மட்டும் இடைநிலை ஆசிரியர் ஆவார். மற்றவர்கள் அனைவரும் தலைமை ஆசிரியர்கள் ஆவார்கள்.
இந்த மோசடியில் ஆதிதிராவிடர் அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது மோசடி தொடர்பான விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்து இருப்பதால் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே 77 தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் அருள்மொழி தேவி கூறுகையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 77 தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நோட்டீசுக்கு அவர்கள் 7 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், கல்வித்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கண்ணம்மாள் கூறுகையில், இந்த மோசடி தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் திரட்டப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் கிடைத்தவுடன், இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, தொடர்புடைய 77 தலைமையாசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.