கலவரக்காடான சத்தியமூர்த்தி பவன்; தமிழர் அமைப்புகள் - காங்கிரசார் பயங்கர மோதல்
, வியாழன், 27 பிப்ரவரி 2014 (12:53 IST)
சத்தியமூர்த்தி பவனை தமிழர் அமைப்புகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. இதனால் ஏற்பட்ட மோதல், கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறையினர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் எழுந்துள்ள பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.இதை தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவன் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பகல் 11 மணியளவில் அண்ணாசாலையும், ஜி.பி.ரோடும் இணையும் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கையில் கட்சி கொடியுடன் திரண்டனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சத்தியமூர்த்தி பவனை நோக்கி வேகமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.இதற்கிடையே போராட்டக்காரர்களில் சிலர் சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் உருவபொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர். அந்த பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ராகுல்காந்தி, சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதற்கிடையே இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நிரந்தரமாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். பின்னர் கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவன் முன்பு அமர்ந்து கொண்டனர்.