''தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்காக உழைத்த எங்களை கறிவேப்பிலை போல தூக்கி எறிந்துவிட்டார்கள்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக கூறினார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், ராமநத்தம் பகுதிகளில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கும் திறமை கொண்ட கட்சிகள் என்றும் ஆனால் விடுதலைசிறுத்தைகள் கட்சி செலவு செய்யும் கட்சி அல்ல, மக்களுக்காக போராடும் கட்சி என்றும் திருமாவளவன் கூறினார்.
''அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் நமது உழைப்பை பயன்படுத்தியது. நமது வாக்குவங்கி தி.மு.க.விற்கு அன்று தேவைப்பட்டது. நமது உழைப்பை பயன்படுத்தினார்கள், ஆனால் கறிவேப்பிலை போல தூக்கி எறியப்பட்டோம். உள்ளாட்சி தேர்தல் பற்றி தி.மு.க. எங்களிடம் பேசவே இல்லை. வஞ்சிக்கப்பட்ட பின்தான் இன்று மக்களை நாடி வந்துள்ளோம்'' என்று திருமாவளவன் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடுவதன் மூலம் அ.தி.மு.க ஆட்சி மாறாது என்றும் தி.மு.க வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர இயலாது என்றும் எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் வழங்குங்கள் என்றும் திருமாவளவன் பேசினார்.