சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதிகளை அவமதித்து பேசியதாக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்பட 6 பேர் மீது அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி, தி.மு.க. கூட்டணி கட்சிகள் 2007ம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தன.
இதை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், முழு அடைப்பு நடத்த தடை விதித்தது.
இதையடுத்து, முழு அடைப்புக்கு பதிலாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. கூட்டணி அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 1ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெற்றது.
உண்ணாவிரதம் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தியதாக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலளர், காவல்துறை தலைமை இயக்குனர், போக்குவரத்து செயலர் ஆகிய 6 பேர் மீது அ.இ.அ.தி.மு.க. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் அகர்வால், சிங்கி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பொதுக் கூட்டத்தில் பேசியதாக அ.இ.அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கில், டி.ஆர்.பாலு பேசிய முழு பேச்சும் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. தணிக்கை செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாவைவே அ.இ.அ.தி.மு.க. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
முழுமையான பேச்சு பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாவின் அடிப்படையில்தான் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியுமே தவிர, தணிக்கை செய்யப்பட்ட பேச்சு அடங்கிய ஒலிப்பதிவு நாடாவை வைத்துக் கொண்டு, அதன் மீது நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது.
டி.ஆர்.பாலு பேசிய பேச்சுக்கள் அடங்கிய உண்மையான ஒலிப்பதிவைதான் நீதிமன்றம் கேட்டது. ஆனால் அதை தாக்கல் செய்ய அ.இ.அ.தி.மு.க தவறி விட்டது. எனவே தணிக்கை செய்யப்பட்ட ஒலிப்பதிவு பேச்சை வைத்து டி.ஆர்.பாலு நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக கருதி தீர்ப்பு வழங்க முடியாது.
ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்பட 6 பேர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.