கடம்பூரில் தொடர்மழையால் குச்சிக்கிழங்கு சாகுபடி தீவிரம்
, செவ்வாய், 18 ஜூன் 2013 (19:17 IST)
கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவலாக அவ்வப்போது மழை பெய்த காரணத்தால் விவசாயிகள் குச்சிக்கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மழை காரணமாக குச்சிக்கிழங்கு செடி தற்போது வளமாக காணப்படுகிறது.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ளது கடம்பூர் மலைப்பகுதி. இது கடல் மட்டத்தில் இருந்து 750 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் குச்சிக்கிழங்கு, கொய்யாபழம் மற்றும் பலாப்பழம் முக்கிய பயிராக விவசாயம் செய்கின்றனர்.இந்த பயிர்கள் முழுவதும் மழையை நம்பியே உள்ளது குறிப்பிடக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கடம்பூர் மலைப்பகுதியில் பருவமழை நன்றாக பெய்ததால், இப்பகுதியில் குச்சிக்கிழங்கு விவசாயம் செழித்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.ஆனால் சென்ற இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்ததால், குச்சிக்கிழங்கு விவசாயம் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக கடம்பூர் மலைப்பகுதியில் பருவ மழை நன்றாக பெய்தது. மலைப்பகுதி முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். உடனே தங்கள் நிலத்தை சீர்செய்து கடந்த இருபத்தி ஐந்து நாட்களுக்கு முன் குச்சிக்கிழங்கு பயிரிட்டனர். போதிய தட்பவெப்ப சூழ்நிலை நிலவுவதால், குச்சிக்கிழங்கு நன்றாக வளர்ந்துள்ளது.இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது கடந்த இரண்டு ஆண்டில் ஏற்பட்ட வறட்சியினால் கடம்பூர் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். தற்போது பெய்த மழையின் காரணமாக பயிரிட்டுள்ள குச்சிக்கிழங்கு நன்றாக வளர்ந்துள்ளது. இன்னும் சரியான தருணத்தில் இரண்டு மழை பெய்துவிட்டால் இந்த வருடம் எங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும் என்றனர்.