கங்கை- காவிரி இணைப்பை கைவிடக் கூடாது என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ந.சேதுராமன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி ஆதாரம் போதிய அளவு இல்லை என்பதினால் கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் என்று அழைக்கப்படும் தேசிய நதிநீர் திட்டத்தை கைவிடுவதாக மக்களவையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை என்று ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது கூறினார். அன்று ராகுல் காந்தி சென்னை செய்தியாளர்களிடம் கூறியதைத் தான் மக்களவையில் அமைச்சர் சொல்கிறார்.
நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமானதுதான். சில முயற்சிகள் மேற்கொண்டால் போதுமான நிதியை திரட்ட முடியும். நதிநீர் இணைப்பு ஏற்பட்டால் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஏழை விவசாயிகள் பயன் பெறுவார்கள். வறட்சி ஒழியும். ஏழை விவசாயிகள் ஏழையாகவே இருந்தால்தான் ஏழ்மையை பணம் கொடுத்து வாங்கி ஆட்சியை பெற முடியும் என்பதனால் தான் தேசிய நதிநீர் திட்டம் கைவிடப்படுகிறது என்று சேதுராமன் கூறியுள்ளார்.